சாக்கடையில் உருண்டு பிரண்டு
தள்ளாடலுடன் அவன் நடக்க,
வீதியெல்லாம் வாந்தி
வீடு தாண்டி உள்நுழைய,
குடித்ததெல்லாம் நாற்றமாக
நாற்புறமும் சிதறியோட,
உடல் முழுதும் குன்றி போக,
சேலைத்தலைப்பில் கண்ணீர் மறைத்து,
கைப்பிடித்து தாங்கிக் கொண்டாள்
கண்ணகியாய் இவள் மனைவி.
காட்சிகளாய் கண்ணெதிரில்
காணுமவன் வாரிசுகளோ
கலங்கித்தான் போகிறது
அப்பனவன் குடித்த நிலை அறியாமல்,
தாரமாய் வாய்த்தவளோ
தன்னுதிர பிறப்புகள்
தலைத்தூக்க வேண்டுமென
தானியங்கி இயந்திரமாய்
தன்னந்தனியாய் உழைப்பிலுழல,
தறிக்கெட்ட நிலையுடனே
தன்னிலை மறந்து அலைகின்றான்.
குடும்பமெனும் கோவிலதை
குடியென்னும் மதுவாலே
குடித்து குடித்து அழிக்கின்றான்.
மகிழ்ச்சி எனும் உணர்வுகளோ
மறைந்து போனது இவன் குடியாலே.
வளமும் நலனும் சீரழிய
தன்னடலும் நலிவடைய,
குடும்பமதை நிர்கதியாய் நிற்க விட்டு
நீண்டு விடுகிறான் சவமாக
வாழ்வுக்கு விடிவின்றி ஒரு நாளில்
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment