Translate

Tuesday, January 20, 2009

மனத்தில் பட்டது

யாரும் கவிஞனாகலாம்

ஒரு முறை கவிஞர். திரு.வைரமுத்து அவர்கள் இதழொன்றிக்கு பேட்டி அளித்திருந்ததில், மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட, பொட்டலம் கட்டும் காகிதத்தில் நாலு வரி எழுதி கவிதை என்கின்றான் என பேட்டி அளித்திருந்தார். இக்கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன்.
மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட பொட்டலகாகிதத்தில் நாலுவரியை கவிதையென்ற பெயரில் எழுதுவதற்கு ஒரு ஆர்வமும், அதற்கு ஒரு வடிகாலாய் தமிழ் மொழி இருப்பதை கண்டு பெருமைக் கொள்கிறேன்.
கவிதையாகட்டும்,கதையாகட்டும், வேறு எந்த படைப்பாகட்டும் நம் சமுதாய பண்பாட்டுக்கு ஏற்புடையதான வகையில் தமிழில் அமையப்பெறின் செம்மையான தமிழ்மொழி திக்கெட்டும் பரவ ஏதுவாகும். படைப்புகளில் குறையிருப்பின், மாற்றி திருத்திக் கொள்ள தக்க வகையில் வழி நடத்தும் ஆசிரியப்பணியையும் மேற்கொள்ளலாமே. இதுதான் என் வேலையா என்றால், வேறு எப்படி சொல்ல?. பள்ளியில் சேர்ந்து அனா, ஆவன்னா எழுத படிக்க கற்றுக் கொள்ளும்போதே அக்குழந்தைக்கு இலக்கணத்தை போதித்தால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா? கற்றுக் கொள்ளத்தான் முடியுமா? அவர்கள் எழுதுவதை தட்டிக் கொடுத்து திருத்தியமைக்க ஊக்கப்படுத்துவதை விட வேறு வழி புலப்படவில்லை. ஒரு தச்சனோ, சிற்பியோ அல்லது வேறு வகை கலைஞர்களோ, புதிதாய் கற்றுக் கொள்பவனைப் பார்த்து ''நீ செய்வது சரியில்லை, என்னிடம் விட்டுவிடு'' என்று சொன்னால் ,அவன் எப்படி கற்றுக் கொள்வது? அந்த சிறந்த கலைஞனுக்கு அடுத்து படைப்பதற்கு யார் இருப்பார்கள். எந்த ஒரு கலைஞனும் பிறவியிலேயே கலைஞனாக பிறப்பதில்லை. அவனும் அனா, ஆவன்னாவிலிருந்து தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் பிறவி கலைஞன் எனப்படுபவன் மற்றவர்களை விட கூடுதலான விரைவுடன் தேர்ந்திருக்கலாம். அதற்காக மற்ற கலைஞர்களையோ, கலைஞனாக முயற்சிப்பவனையோ விமர்ச்சிக்க முடியாதல்லவா!
இவருக்கு கிடைக்க வேண்டிய திரைப்பட கவிதை வாய்ப்புகள் தவறிப்போனதாலோ, தகுதியில்லா நபர்கள் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்ததால் ஏற்ப்பட்ட கோபமோ தெரியவில்லை. அப்படி இவருடைய வாய்ப்பை தட்டிப் பறித்தவரும் மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையனாக இருந்து, திரைப்பட கவிஞனாக உருப்பொற்றவரோ என்னவோ !. தற்போதய சில,பல திரைப்பட பாடல்களின் பாடல் வரிகளின் அர்த்தங்களே புரிவதில்லை. அப்படியே புரிந்தாலும் விரசமான, மிக கேவலமான நம் சமுதாய கலாச்சாரத்துக்கு ஏற்புடையில்லாத வார்த்தைகள், ஒலிகள், அங்க அசைவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மனத்தில் படுவதையும், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற ஆவல் சிறு வயதிலிருந்தே உடையவன் தான். ஏனோ ஒரு தயக்கம். உதாரணமாக கவிஞர் திரு.வைரமுத்து அவர்களுடய பேட்டியைப் படித்தே மூன்று நான்கு வருடங்களாகிறது, என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்பொழுதே எழுத தோன்றிய எண்ணம், இப்பொழுதுதான் உருப்பெற்றிருக்கிறது. அப்பொழுதெல்லாம் நான் எழுதத் துவங்கவில்லை. இவ்வளவு தூரம் எழுதுவதற்கு மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையனாக நானும் இருந்ததாலோ!
மனத்தில் பட்டதை எழுதியிருக்கிறேன். கவிஞர் திரு. வைரமுத்து அவர்களை குறை கூறும்பொருட்டோ, அவதூறு கூறும் எண்ணத்திலோ இது எழுதப்படவில்லை. எவ்வகை கலைஞராயிருப்பினும் உணர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினால் வெளிப்பட்டதாகும். வருடங்கள் சில கழிந்து விட்டாலும், அந்த பேட்டியிலிருந்த '' மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட பொட்டலம் கட்டும் காகிதத்தில் நாலு வரி எழுதி கவிதை என்கின்றான்'' என்ற இந்த வரிகள் மட்டுமே, இதை எழுதத் தூண்டியது என்பதை பனிவுடன் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

Wednesday, January 14, 2009

பொங்கலோ... பொங்கல்.

பொங்கலைப் போல
இனிக்க வேண்டும்,
உறவும் நட்பும்.

பொங்கலைப் போல
மணக்க வேண்டும்,
பேச்சும் செயலும்.

பொங்கலைப் போல
பொங்க வேண்டும்,
உடலும் மனமும்.

பொங்கலைப் போல
கொண்டாட வேண்டும்.
என்றும் நாமும்.

Thursday, January 8, 2009

அப்புறமென்ன ?

அழகி அவள் பார்க்க வந்தாள்.

அற்புதமாய் அவளிருந்தாள்.

ஆனந்தமாய் பெசியபடி,

அவளருகில் நெருங்கிச் சென்றான்.

அவளோ சிரித்தபடி,

அப்புறம் பார்போமென்று,

அழகாக கையசைத்து,

அங்கிருந்து அகன்று சென்றாள்.

Monday, January 5, 2009

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால்
உதித்தது ஒன்று.

உறவற்று போனதால்
உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்
உறுதியென நினைத்து.

உயர்த்தும்
உறுதியில், பள்ளியில் சேர்த்தாய்.

உயர்வளிக்குமிடத்திலே
உயிரும் பறந்ததோ.

உதித்திருந்த மலரும்
உதிரும் நிலையிலே,

உதித்தவன் உயிருடன்
உன்னுயிரும் துடிக்க,

உன்னுடைய சோகமோ
உயர்வாயிருக்க,

உணர்ச்சிகளுக்கிடையில்
உறுதியாய் எடுத்தாய்..

உள்ளத்தின் சோகமோ
பறந்தே அலைந்தது.

உன்னுடைய உள்ளமோ
விரிந்தே கிடந்தது.

உடல் தானம் செய்து,
ஊனத்தைப் போக்கி,

ஊனமுற்றோர் வாழ
உதவி புரிய,

ஈன்றதை பறிக்கொடுத்த நிலையிலே,
ஈடில்லா இழப்பிலே,

முடிவதை செய்தாய்
விரைந்தே எடுத்தாய்.


மகனென்ற உறவு
இல்லாமல் போகலாம்.

உன்னுடைய செயல்கள்
தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய நினைப்புக்கு
தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.
ஆறுதல் சொல்லவும் முடியவில்லை.

தலை வணங்குகிறேன்
உனது முடிவுக்கும் உறுதிக்கும்.



பின் குறிப்பு; சேலம் அருகில் ஒரு பள்ளியில் மாணவன் தலையில் அடிப்பட்டு ''மூளைசாவினால்'' இறந்து விட்டான். அவனின் தாயோ, அவன் உடலிலிருந்து உயிர் பிரியுமுன்னே உடல்தானம் செய்ய முடிவெடுத்து, மிகவும் சிரமத்திற்கிடையில் சென்னைக்கு வந்தும், அந்த சிறுவனின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காததால், யாருக்கும் பயனின்றி மரணமடைந்து விட்டான். அந்த தாயின் இழப்பும், சட்டங்களின் பெயராலே ஏற்ப்பட்ட பயன்படவேண்டிய நோயளிகளுக்கான இழப்பும் எமக்கு ஏற்படுத்திய வேதனையை எம்மால் முடிந்த அளவு கவிதையிலே வடிக்க முயற்ச்சித்து இருக்கிறேன்.

Friday, January 2, 2009

புத்தாண்டு வாழ்த்து 2009

மயக்கத்திலிருந்தோம்
சென்றாண்டிலே.
விழித்துக் கொள்வோம்
.இப்புத்தாண்டிலே.

பலவற்றை இழந்தோம்
சென்றாண்டிலே.
காத்துக் கொள்வோம்
இப்புத்தாண்டிலே.

மாறுப்பட்ட இதயங்களாய்
சென்றாண்டிலே 
ஒன்றுபட செய்வோம்
இப்புத்தாண்டிலே.

அடிதளம் அமைத்தோம்.
சென்றாண்டிலே.
கட்டி முடிப்போம்
இப்புத்தாண்டிலே.

விதைகளை ஊன்றினோம்
சென்றாண்டிலே.
செழிப்படைய செய்வோம்
இப்புத்தாண்டிலே.

இணைய நினைத்தோம்
சென்றாண்டிலே.
வலிமையைக் காட்டுவோம்
இப்புத்தாண்டிலே.

உறுதிகள் எடுத்தோம்
சென்றாண்டிலே.
வெற்றிகளை அடைவோம்
இப்புத்தாண்டிலே.

ஆங்கில புத்தாண்டு 2009

நல்லதாகவே தொடரும்
நன்மையாகவே இருக்கும்
நலமாக இருப்போம்
நம்பிக்கையில் சொன்னோம்
நல்வரவை, இப்புத்தாண்டிற்கே.

உறுதியாய் இருப்போம்
உற்சாகமாய் செய்வோம்
உண்மையாய் உழைப்போம்
உணர்ந்துக் கொண்டு.

வேறுப்பட்ட இதயங்களின்
வேதனைகளை களைய,
வேற்றுமைகளை அகற்றி
வேருடன் அழிப்போம்.

புகழ்ச்சிகள் இன்றி
புரிதல்கள் கொண்டு
புணரமைத்துக் கொள்வோம்
புத்தாண்டு முதல் நமையே.