எண்ணங்களின் சங்கமம் மனத்திலே நிகழ,
உணர்வுகளின் துடிப்பு, உடலிலே தெரிய,
எல்லையற்ற மகிழ்வால் முகமும் சிவக்க,
இதழ்களும் விரிந்தது, புன்னகை சிந்தி,
தாலாட்டியது மார்பு, உயர்ந்தும் தாழ்ந்தும்.
நினைவுகளின் ஓட்டம் நிற்காமல் ஓட,
அனுபவத்தின் சுவைகள் கலவையாய் ருசிக்க,
சூழ்நிலை(யால்) நடனமிட்டது
விரிந்த இமைகளுடன் விழித்த விழிகளும்.
ஆனந்த காற்றோ, சுட்டெரித்த வெம்மையோ,
எச்சரிக்கை மணியாய்
விழிகளின் ஓரம் நீர்துளி திரள,
உடனடி தடையென உத்தரவு பிறக்க,
துளிர்த்த விழிநீர் தொங்கலில் நிற்க.
காரிருள் நிலையாய் மௌனமோ சூழ,
விரைந்தது கைகள்,விரல்களால் ஒற்ற.
காலத்தின் நேரமோ காற்றாய் கரைய,
நிகழ்வுகளின் தாக்கம் எழுத்திலே பொங்க,
ஒப்புதல்களின்றி உணர்வுகள் அடங்க,
தன்னிச்சையாக கடமைகள் தொடர,
ஓரங்க நாடகமாய் நிகழ்ந்தது அனைத்தும்.