#விதிகளே
தலைவிதிகளாய்
மாறாமல் இருப்பதற்கே
சாலை விதிகள்.
#கட்டுபாடுகள்
கசக்கத்தான் செய்கிறது
அதனாலென்ன
நினைத்து பாருங்கள்
உங்கள் வாழ்வு இனிக்குமே.
#வேகத்தினால் இன்பம்
அக்கணம் மட்டுமே.
சாலை விதிகளை
மதித்தால் இன்பம்
வாழ்நாள் உள்ள வரையுமே.
#தலை விதிகளை மாற்றியெழுத
விரைந்து செல்லாதீர்கள்
சாலை விதிகளை புறக்கணித்து.
#விபத்தில் மரணத்தின் வலி
ஒரு நொடி என்றாலும்,
வாழ்வின் முழு இன்பமும்
முடிந்து விடும் அந்த நொடியிலே.
#சாலை விதிகளை மீறி
எமனாகவும் மாறாதீர்கள்
எமனுக்கு
இரையாகவும் ஆகாதீர்கள்.
#பெற்றெடுப்பதற்கு பத்து மாதம்
வளர்ந்து நிற்பதற்கு இத்தனை காலம்.
ஒரு நொடியில் மாற்றி விடாதீர்கள்
சாலை விதிகளை மீறி.
#சாலை விதியை நீங்கள் மீறி
அடுத்தவர் தலைவிதியை
மாற்றி விடாதீர்.
#ஒரு வழி பாதையை
நீங்களாக இரு வழியாக்கினால்,
ஒரு வழியாகவே போய் விடுவீர்
திரும்ப முடியாமல்.
#சாலை விதிகளை மிதித்து செல்லாதீர்
என்றேனும் ஒரு நாள், நீங்கள்
சாலையில் நசுங்கிட நேரிடலாம்.
#சுற்றி வர நேரமென்று
குறுக்கு வழி தேடினால்?
சமயத்தில் குறுகிவிடும்
உங்கள் வாழ்வின் நேரமும்
#உங்களை
அடிமை படுத்த அல்ல சாலைவிதிகள்
பயணம் இனிமையாய் முடிந்து
வாழ்வு அமைதியாய் செல்ல
#வாகனத்தில் மகிழ்வுடன் செல்லுங்கள்
அமரர் வாகனத்தில் அல்ல.
#பொறுப்பு வேண்டும்
சாலைவிதிகளை கடைப்பிடிப்பதில்
பொறுமை வேண்டும்
சாலையில் பயணிப்பதில்
#பொறுமையின்றி முந்த வேண்டாம்
பொல்லா நாசம் அடைய வேண்டாம்.
#யோசித்து செயல்படுகிறோம்
வாழ்வின் மேடுபள்ளங்களை கடக்க,
சாலை மேடுபள்ளங்களை கடக்க
சாலைவிதிகளை கடைப்பிடியுங்கள்.
#2006ல் சாலைவிதிகளின் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக
எழுதியது.
No comments:
Post a Comment