Translate

Monday, December 11, 2017

முன் வரிசை



குருவாய் அவளிருக்க
குழந்தையாய் நானிருக்க,
பயிற்றுவிக்க அவளிருக்க
கற்றுக் கொள்ள நானிருக்க,
ஆலாபனை அவள் செய்ய
அதிலே நான் மூழ்க,
பாடங்களோ பெரிதாக
பக்குவமாய் அவள் கொடுக்க,
பதப்பட்ட நேரத்தில்
பாழும் மனசு குழம்புதடா.
ராகங்களை அவள் மீட்ட
ரகசியமாய் நான் ரசிக்க,
பருவத்திலே அவளிருக்க
பக்கத்திலே நானிருக்க,
கொந்தளித்து மனத்திலே
கொழுந்து விட்டு எரியுதடா.
கற்க வந்த பாடங்களோ
கண்ணாமூச்சி காட்டுதடா.
கற்க புது பாடங்களை
மனது தேடி அலையுதடா.
வனப்பாய் அவளிருக்க
வளைத்து விட நான் நினைத்து
கூட்டி கழித்து கணக்கிட்டேன்
மனசுக்குள்ளே அவசரமாய்.
கணக்குகளில் தவறிருக்க
கன்னத்தில் போட்டுக் கொண்டேன்
பலமாக இரு பக்கம்,
பாவச்செயலை எண்ணி நான்.
கனவுகளை தள்ளி வைத்து
கற்பதிலே மனத்தை வைத்தேன்.
கலையிலே முழு மூச்சசாய்
கண்ணும் கருத்துமாய் மூழ்கி விட்டேன்
அவள் முகம் மலர்ந்தது
நான் கற்ற வேகத்தில்.
புது உலகம் காட்டி விட்டாள்
இசையெனும் ஞானத்திலே.
எனை மேடையேற்றி அவள் ரசித்தாள்
முன் வரிசை இருக்கையிலே…..

--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏







No comments: