நேர்மையற்ற அரசாலே
நேர்ந்துவிட்ட கொடுமையிதுவோ?
நேர்ந்திருக்கும் கொடுமையான
நேரத்திலும்
நேசமற்ற செயலாக
நெருக்கமற்ற மனத்துடனே
நீட்டுகிறாய் தாளொன்றை
நீ கல்நெஞ்சு மனிதனன்றோ.
நினைத்தாலே மனங்கலங்கும்
இடத்திலே நின்று கொண்டு
நிசமாக்க நகலெடுக்கும்
நீசப்பிறப்போ நீ?
எப்பிறவி பாவங்களை
இப்பிறவியில் அடைந்தானோ?
வழி கண்டு நகர்ந்து விட
இவ்விழியாலே இயலவில்லை.
துடிக்கின்ற துடிப்பெல்லாம்
தூயோன் அடி சேர,
துன்பப்படும் உன் நிலைக் கண்டு
துடிக்கிறதே மனம் நிலையின்றி.
வாழ்க்கையில் சில வாசங்களை
வாழ்ந்த நீயும் துகித்திருப்பாய்.
வரண்ட இந்த நாட்களில் – நினைவு
வருமோ இப்பசிக் கொடுமையிலே.
கோடி போட வழி நோக்கி
கோடான கோடிகளில்
கோமகனாய் வாழ்ந்ததெல்லாம்
கொன்றொழிந்தது எதனாலோ?
அனுபவிக்க ஏதுமில்லை
எடுத்து போக ஒன்றுமில்லை
வாழ்ந்ததற்கு பயனுமில்லை
விரைந்து செல்ல வழியுமில்லை.
வாழ்ந்தது போதுமென
வந்து உனை அழைத்து செல்ல,
வாசலைத் திறக்கச் சொல்லி
வணக்கமுடன் நீ பணிந்திடுக.
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
No comments:
Post a Comment