Translate

Wednesday, January 24, 2018

மறைந்து கொண்ட இடமெங்கே?


மன்னவனே! மன்னவனே!!
மனத்தைக் கொள்ளையடித்து போனவனே.
கொண்டாட வழியின்றி
கொண்டு நீ போனதெங்கே?

மல்லுக்கட்டி முயற்சித்தேன்.
மன்றாடி பார்த்து விட்டேன்.
பறித்துக் கொண்ட பின்னாலே
பறந்து நீ போனதெங்கே?

அறியாத பெண்ணென்னை
ஆழ்த்தி விட்டாய் காதலிலே.
கலந்து விட்ட பொழுதினிலே
கரைந்து நீ மறைந்ததெங்கே?

மலரது செழிப்பாக மலருமுனு
மலர்ந்த பின்னே, மனமும் வீசுமுன்னு
கனவுகளில் மூழ்கியிருந்த நேரமதில்
கலைத்து விட்டு காணாமல் போனதெங்கே?


அடிப்பதெல்லாம் அலைகளோ?
சுழல்வதெல்லாம் புயற்காற்றோ
தள்ளாட்டத்தில் என் மனத்தை
தள்ளி விட்டு மறைந்ததெங்கே?

தெளிவற்ற நினைவாலே
தேள் கொட்டிய நிலையாக,
துடிக்கின்ற மனத்துடன் நானிருக்க,
துண்டித்து நீ பறந்ததெங்கே?

துளாவும் உன் கையெண்ணி
துவளும் எனை நினைத்து
துகித்திருந்த என்னை
துடிக்கவிட்டு போனதெங்கே?

யாரிடம் நான் சொல்வேன்?
எப்படியிதை விவரிப்பேன்?
எண்ணியெண்ணி நான் உருக,
தவிக்க விட்டு போனதெங்கே?


ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்


No comments: