கற்பனைக்கு உரு கொடுத்து
கனவுகளில் மிதக்க விட்டு
கரையேற வெளிச்சமின்றி
கண்களை மறைத்து விட்டு
காற்றிலே கலந்ததாக
கபடமது ஆடுகிறார்.
ஓராயிரம் வழியிருக்க.,
ஒன்றுமறிய பிள்ளையவளை
ஒப்பனையாய் முன்னிறுத்தி
ஓடத்திலுள்ள பழுத்தறிந்தும்
ஓடும் பெரும்வெள்ளத்தில்
ஓட விட்டு, உயிர் பறித்து
ஒப்பாரி வைக்கின்றார் - வேதம்
ஓதும் நல்லவராய் .
ஒரு பாதை அடைத்தாலும்
இரு வழி மீதியிருக்க,
முடிந்தது வாழ்வென
முடிச்சிட்டு மிரட்டி விட
முடிச்சிட்டாள் சேலை முனையில்
முழுமையாய் வாழ்வையவள்.
வருத்தங்கள் கலைந்திட
வழியதை காட்டியிருந்தால்
வளமுடன் வாழ்வும்
சிறப்புடன் ஒரு பெண்மணியும்
உயர்நிலையில் குடும்பமதும்
வளர்ந்திருக்கும் மகிழ்வுடனே
சிந்தியினி பயனில்லை
சிந்தனையில் மனமொன்றி
சிறை பிடிக்கும் வேடரிடம்
சிக்கியினி அழியாமல்
சீர்தூக்கி வளர்த்திடுவோம்
சிற்பிகளாய் அடுத்தடுத்த குருத்துக்களை..
அவள் நிலையை உள்நிறுத்தி
அவசர முடிவு கொள்ளாமல்
அனுபவ பாடமாய் கற்றுணர்ந்து
அலசிடுவீர் உம் நிலையை.
அள்ளிடுவீர் வெற்றிகளை
அளவீடுகள் ஏதுமின்றி.
#அருமை மாணவ செல்வங்களே , அச்சபடாதீர். அலசி ஆராயுங்கள். அறிவும்,ஆற்றலும் உங்களிடம். வாழ்த்துகள்.
என்றும் உங்களுடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
வாழ்த்துகள் முகநூல் குழுவில் பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment