தவழ்ந்த புவியை பார்க்கவில்லை
வழி பார்க்க விழிகளில்லை
ஊன்றுகோல் துணையிருக்க
ஊர் சுற்றும் இரயிலேறி
ஓயாமல் உழைகிறாரே - வாழ்வு
பிழையின்றி சுழன்றோட.
நன்மக்களாய் வாரிசுகளும்
நிலையுணர்ந்து கற்றனரே,
தந்தையின் சுமை நீக்கி
தங்கள் வாழ்வை உயர்த்திடவே.
நிலைதனையும் அடைந்தனரே
பணிகளில் காலூன்றி.
வயது முதிர்ந்த காரணத்தால்
காலாட காற்று வாங்கி
காலமதை வீணாக
போக்கிட விரும்பாமல்,
தேவையில்லா நிலையினிலும்
தோளிலினியும் சுமை தூக்கி
தெரிந்த வழி ரயிலேறி
முடிந்தவரை உழைத்திடவே
பயணமதை தொடர்கிறாரே.
விழி வேண்டி
வருடங்கள் முப்பதோட
காத்திருக்கும் விழிகளுக்கு
விடையென்று கிடைத்திடுமோ?
கண் குளிர கண்டிடுமோ - குடும்பத்தை
களிப்புடன் கொஞ்சுகின்ற
காலமது வந்திடுமோ?
#மண்ணுக்கும், தீயிக்கும் இரையாக்காமல்
இரக்கமுடன் செயல்படுங்கள் கண்தானம் கொடுக்க.
No comments:
Post a Comment