விதைத்த விதைகள் முளைக்கும் முன்னே
காலச்சக்கரம் விரைந்துமை அழைக்க,
விண்ணகம் சென்றீர், திரும்பா நிலையுடை
விண்ணூர்தி போல.
எங்களின் விழியோ ஊற்றென பொங்க
சிதறும் விழிநீர் மார்பை நனைக்க,
தூவா செய்தோம் மீண்டும் நீர் பிறந்து
பாரதத்தின் கோட்டையை கட்டி முடிக்க.
நீர் நட்ட விதைகள் துளிர்த்திட வேண்டும்
செழிப்பாய் அவையாவும் வளர்ந்திட வேண்டும்
நாளைய பாரதம் உழைப்பால் உயர,
உம் ஆசைகள் யாவும் ஆசிகளாக வேண்டும்
உலகம் போற்றும் வல்லரசாக
இந்திய நாட்டை மாற்றிட எண்ணி
நாளைய தூணில் நம்பிக்கைக் கொண்டு
நயம்பட உரைத்தீர் நற்பண்பு வளர.
வளரும் தலைமுறை உம் வழிதனில் நடந்து
இளைய தலைமுறை மனத்தினில் பதித்து
அக்னி பறவையாய் சிறகுகளை விரித்தால்
மனத்தின் வலிதனை அறிந்தவர் உணர்வார்.
மரணத்தின் இழப்பினை யாதென்று உரைப்பார்.
மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு
மண்டியிட்டு அஞ்சலி செய்வோம்.
1 comment:
இதயத்தின் ஒலி ரதம்
தாமதித்து துடித்தது. சாதனை மகனின் சகாப்தம் முடிந்ததை எண்ணி.
உறவுமில்லை,
நேரில் பார்ததுமில்லை.
ஏதோ பந்தம் போல் நெஞ்சை அடைத்தது.
மீண்டும் இவரை போல் ஒருவர் கிடைப்பாரா என்று.
ஆத்மா சாந்தியடையட்டும்.
Post a Comment