Translate

Tuesday, May 17, 2011

எப்படி... எப்படி?


எனக்கொரு ஓர் உலகம் தனியாய் சுழல,
பரிதியும் மதியும் தோன்றியே மறைய,
பூத்த மலர்களும் புன்னகைப் பூக்க,
சுகந்தம் எங்கும் சுகமாய் பரவ,
பனியும் மழையும் இதமாய் பொழிய,
நளினமாய் மக்கள் மகிழ்வாய் திகழ,
உயிரினம் அனைத்தும் பகையின்றி உலவ,
எதிலும் இனிமை, எங்கும் மகிழ்ச்சி,
கழிந்திடும் பொழிதில் கீரல் பட்ட ஒலியாய்.

எங்கோ ஓலம் மனத்தை பிசைய,
நினைவுகளில் விரிச்சல் உச்சத்தை அடைய,
நிதர்சன நிலையை உணர்ந்தது மனமே,
தாபமுடன் கோபமும் பேராசை, பொறாமை
வீம்பு, தர்க்கம், உணர்வுகளில் பொய்மை.
எங்கும் எதிலும் நிலையற்ற தன்மை.
பெற்றெடுத்தத் தாயை கூறுபோடும் மனிதனாய்
காக்கும் பூமியை சல்லடையாக்கினான்.

இவன் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைத்தான்.
இயற்கையின் பிடியில் இருப்பதை மறந்தான்.
இரும்பென்ன, கல்லென்ன இடியாதென நினைத்தால்,
இயற்கையின் முன்னே நில்லாது போகுமே.
உணர்ந்தவன் நடந்தால் உயர்வாய் வாழலாம்.
என்ன வழி அவனுக்கு எப்படி சொல்வேன்?
ஏகப்பட்ட இரவுகள் எண்ணங்களில் அலைய,
என் மனம் தொலைந்தது ஏங்கியே தவித்து.

No comments: