Translate

Sunday, December 10, 2017

புது உலகம்


புத்தாடை புனைந்திருந்தேன்
புத்துணர்வில் மூழ்கியிருந்தேன்
பூத்த இடம் இழந்து நான்
புது இடம் புகுகின்றேன்.
பூமாலை கழுத்திலாட,
புத்துறவு நெஞ்சிலுரச,
புதுமையாய் உணர்கின்றேன்

பூட்டியிருந்த அறைக்குள்ளே
புதுமண தம்பதிகளாய் நாங்களிருவர்
புன்னகையோ
பூடகமாய் அவர் முகத்தில்,
பூ வைத்த தலையெனதை
பொன்கரத்தால் மெல்லென
மேலுயர்த்தி,
என்
பூவிதழை,
ஒர் விரலால்
பூங்காற்றாய் தடவி விட,
சொக்கியதே விழியிரண்டும்
மேலேற, 
இமையிரண்டும் கீழிறங்கி 
மூடிக்கொள்ள.
புதுபுது கனவுகள்
நினைவுகளில் தொக்கிக்கொள்ள
உருக்கொள்ள தொடங்கியதே
புது உலகமங்கு.

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: